அதிகார எல்லைக்குள் இருக்கும் தொழிற்சாலைகளில் ஏற்றுமதியைக் கண்காணிப்பதும் அரசு அதிகாரிகளின் வேலைகளில் ஒன்று. சுயமாகவே தொழிற்சாலைகள் ஏற்றுமதி செய்துகொள்ளவும் சட்டம் அனுமதிக்கிறது. அதோடு அல்லாது, சுயமாக ஏற்றுமதி செய்துகொள்வதா அல்லது அரசு அதிகாரியை அணுகுவதா இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பது தொழிற்சாலைகளின் பிரத்தியேகத் தேர்வாய் அளிக்கப்பட்டுள்ள உரிமை. மட்டுமல்ல, அதிகாரத்தின் பிடியைத் தளர்த்தும் முகமாய் எந்த திட்டத்திலும் வராத வழமையான ஏற்றுமதிகளை அந்தந்த நிறுவனங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அமலுக்கு வந்தாகிவிட்டது.தங்களிடம் வந்துதான் ஏற்றுமதிசெய்ய வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்தலாகாது என்றும் சட்டம் சொல்கிறது. பலகாலமாகவே, அரசின் நோக்கம் தொழிற்சாலைகளின் மீதான அதிகாரிகளின் கெடுபிடியை, அத்துமீறல்களைத் தடுப்பது என்பதே. அதன் காரணமாகவே பெரும்பாலான நடவடிக்கைகள் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வை /கண்காணிப்பு இல்லாது தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களிடமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதிகாரிகள் தொழிற்சாலை /நிறுவனங்களுக்கு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் அலுவலகத்திற்கே வராமல் மாதாந்தர தாக்கல்களையும் வரி கட்டுவதையும் ஆன்லைனில் செய்வது சலுகையாகவோ வசதியாகவோ அல்ல, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.