16 January 2018

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 5

ரமேஷ் பிரேதனிடமிருந்து மெய்ல் வந்திருக்கிறது. இதுகள் இவ்வளவு பெரிய சாக்கடை என்பது தெரிந்திருந்தால் உதவிசெய்ய நான் இறங்கியிருக்கவே மாட்டேன். நான் இறங்கியதோடு அல்லாமல் உங்களையும் இழுத்துவிட்டு உங்களது பணத்தை வீணடித்தமைக்காக என்னை மன்னியுங்கள் நண்பர்களே. 

ஜெயமோகனும் நண்பர்களும் தெருவில் நின்ற தனக்கு, இரண்டு லட்சத்தில் ஒத்திக்கு வீடு பார்த்துத் தங்க வைத்திருக்கின்றனர் என்று மட்டுமே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார் ரமேஷ் பிரேதன்.  அது இரண்டல்ல நாலரை லட்சம் என்பது எனக்குத் தெரியவர நான் பொதுவில் போட்டு உடைத்ததும் முதல் முறையாக டாக்டர் நண்பரிடம் நாலரை என்று அவர் வாயாலேயே சொல்லியிருக்கிறார் உலகளாவிய வாசகர்களைக் கொண்ட படைப்பாளியான ரமேஷ் பிரேதன்.

இவரது பிஸியோதெரப்பிக்கு, ஆறுமாதங்களுக்கு மாதா மாதம் 2000 தர முன்வந்த நண்பர் இவரிடம் போனில், ஃபிக்சடில் போடுங்கள் என்று அறிவுரை கூறியதற்கு, என்னைப் பற்றிக் கேவலமாகப் பேசியிருக்கிறார். மாமல்லன் திரட்டியது 1.5 லட்சம்தான் மீதி 1.25 லட்சம் எஸ். ராமகிருஷ்ணனின் வாசகர்களும் ஜெயமோகனின் வாசகர்களும் அளித்தது. எல்லாப் பணத்தையும் ஃபிக்ஸடில் போடச்சொல்ல இவருக்கு என்ன உரிமையிருக்கிறது என்று கன்னாபின்னாவென்று பேசியிருக்கிறார். சிங்கப்பூர் நண்பர் விடுங்க மச்சி சார், எதுக்கு அதெல்லாம் உங்க மனசுதான் வீணா கஷ்டப்படும் என்று ரமெஷ் பிரேதன் பேசிய பல விஷயங்களை என்னிடம் கூற மறுத்துவிட்டார்.   

திரும்பவும் சொல்கிறேன் ஜெயமோகன் இந்த சாக்கடைக்கு நாலரை லட்சம் திரட்டிக் கொடுத்து, அது ஒரே வருடத்திலேயே மாயமானது மட்டும் எனக்கு முன்பே தெரியவந்திருந்தால், 2016ல் நிதி திரட்டப்பட்டபோது நான் கொடுத்த ₹5,000 ஐயே கொடுத்திருக்க மாட்டேன். 2017ல் உங்களையும் இழுத்துவிட்டிருக்கமாட்டேன். மன்னியுங்கள் நண்பர்களே.

ரமேஷ் பிரேதன் என்கிற இந்த நபர் நேரத்துக்கு ஒன்று பேசுபவர், உண்மைக்கும் இவருக்கும் தூரத்து உறவுகூடக் கிடையாது என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தைக் கூறுகிறேன். 

பிரேமோட தம்பிக்கும் மாலதியோட தங்கைக்கும் நான்தான் கல்யாணம் பண்ணிவெச்சேன். பச்சையா சொன்னா மாமா வேலை பார்த்தேன். ஏன்னா அப்படியாவது, எங்களோட இருக்கிறதால மாலதி வீட்லேந்து அவளுக்குத் தொந்திரவு இல்லாம இருக்குமேன்னு.  

என்று என்னிடம் கைபேசியில் கூறியவர், இந்தக் கடிதத்தின் பிற்பகுதியில் அதே நிகழ்வை எப்படிச் சொல்கிறார் என்று பாருங்கள். 

//பிரேமுடைய தம்பிக்கு தனது தங்கையை மணம்முடித்து, உறவு என்ற வலைக்குள் பிரேமை முடக்கினார்.// 

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் 
உறவு கலவாமை வேண்டும் 

- இராமலிங்க சுவாமிகள்

இந்த சாக்கடைகள் வாழ்ந்த வாழ்வை நீங்களே படித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.


***

யார் இந்த மாலதி மைத்ரி?
நீதி வேண்டி ரமேஷ் பிரேதனின் வாக்குமூலம்

உலகம் முழுவதுமிருக்கும் தமிழ் இலக்கியவாதிகளுக்கும் சீரிய தமிழ் வாசகர்களுக்கும் மாலதி மைத்ரி என்ற பெயரில் என்மீது கொலைவெறியை உளறிக்கொட்டிவரும் மனநோயாளி பற்றிய உண்மைகளை முதலும் கடைசியுமாக எழுதுகிறேன்.

நானும் பிரேமும் ஒன்பதாம் வகுப்பிலிருந்து நண்பர்கள். இடையில் பிரிந்து பன்னிரெண்டாம் வகுப்பு கோடைவிடுமுறையில் எங்களுடைய பள்ளி தமிழாசிரியர் முத்துக்குமாரசாமி அவர்களால் எங்களுக்கு ஒருவருக்கொருவர் கவிஞர்களாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டோம். ரோமன் ரோலன் நூலக வாசலில் நாங்கள் ஒருவரை ஒருவர் கைக்குலுக்கிக் கொண்டோம். அன்றிலிருந்து (ஆண்டு 1983- 84 கோடை) 15- 09- 2007 வரை சேர்ந்து வாழ்ந்தோம். ஒரு கட்டத்தில் தனித்தனியாக எழுதுவதை விடுத்து சேர்ந்து எழுதினோம். அதே நூலகத்தில் சாருநிவேதிதாவைச் சந்தித்தோம். அவரும் அமரந்தாவும் கிரணம் என்ற பத்திரிகையைத் தொடங்கி எங்களுடைய படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டு தமிழ் இலக்கியச் சூழலில் பெரும் புயலை உருவாக்கினர். பிரேதா, பிரேதன், பிரேம், ரமேஷ் பிரேதன் என்ற பெயர்கள் சுழன்றடித்தன. கோணங்கி, நிறப்பிரிகை ரவிக்குமார், ராஜ் கவுதமன், அ. மார்க்ஸ், பழமலை, பா. கல்யாணி, கோவை ஞானி போன்ற தீவிர மார்க்சியரும் இலக்கியவாதிகளும் நண்பர்களானார்கள். கிரியா வெளியீடாக அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ வெளிவந்தது. அந்த நூலைப் பற்றிய விவாத அமர்வில் சேலையில் தோசைக்கல் கண்ணாடி அணிந்த ஒருவரைச் சந்தித்தேன். பெயர் மாலதி என்றார். ஊர் வில்லியனூர் என்றார். வீட்டுக்கு அழைத்தார். போனேன். எனக்காக மீன் சமைத்து வைத்துச் சாப்பிடச் சொன்னார். கொலைப் பசி. இருந்தாலும் வெட்கப்பட்டுக்கொண்டு சாப்பிட மறுத்துவிட்டேன்.

நானும் மாலதியும் 200 ரூபாய் மாதவாடைகைக்கு வீடு எடுத்தோம். அண்ணன், தங்கை என்று சொன்னோம். பிரேமை எனது தம்பி என்று சொன்னேன். 2007 வரை நானுமும் பிரேமும் அண்ணன் -தம்பியாகவே வாழ்ந்தோம். பிரேம் தனது வீட்டுக்குப் போய் வந்துகொண்டிருந்தான். புது வீடு, மாடிக்கூரை, கீழே மாட்டுப்பண்ணை. புது வீட்டில் முதல் இரவு. என்னுடன் அருகில் இருக்கும் பெண்ணின் பெயரைத் தவிர எனக்கு அவரைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவருடைய கண்கள் சுரந்து வழிந்தன. ‘ஏதோ தைரியத்தில் வீட்டைவிட்டு வந்துவிட்டேன். அப்பா ஒரு தையல்காரனை மாப்பிள்ளையாகப் பார்க்கிறார். அதனால் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன். வேலை பார்த்துக்கொண்டே மாலை வகுப்பில் சட்டம் படிக்கப்போகிறேன். எனக்கு யாருமில்லை, பயமாக இருக்கிறது.’ மாலதியின் கண்ணீர் என் தொண்டையில் கரித்தது. அவருடைய முகத்தை என்னிரு கைகளால் ஏந்தி, அவருடைய கண்களில் உதடு குவித்து நீரை உறிஞ்சினேன். மாலதியின் முதல் ருசி. நான் பேசினேன், ‘மாலதி, நான் என்.சி. பி. எச். சில் வேலை செய்கிறேன். பிரேம் சக்தி பைனான்சில் வேலை செய்கிறான். நீ எங்களுடனேயே இரு. நான் உயிரோடு இருக்கும்வரை உன்னுடன்தான் இருப்பேன். உனக்கும் பிரேமுக்கும் வீடு வாசல் குடும்பம் உள்ளது. நான் யாருமற்றவன், அநாதை.’ கண்ணீரோடுதான் தழுவிக்கொண்டோம். முத்தங்கள் உப்புக்கரித்தன. அன்றுமுதல் இன்றுவரை கண்ணீரும் கவிதையும் தவிர என்னிடம் வேறெதுவும் மீந்து நிற்கவில்லை.

ஒரு பெண்ணோடு இருவர் வாழ்வது புதுச்சேரியில் புயலைக் கிளப்பியது. ஏற்கெனவே நானும் பிரேமும் Manifested Homosexuals. இந்த அழகில் ஒரு பெண்ணோடு இருவர். ராஜீவ் காந்தி கொல்லப்படுகிறார். மாலதியைப் பார்ப்பதற்கு தாணுவைப் போலவே இருக்கிறார் என அக்கம்பக்கத்தில் பேச்சு. மாலதியை விட்டொழி என பிரேம் என்னிடம் ஓயாமல் சண்டை. எனக்கு அடி உதை. சாட்சி பூதமாய் ரவிக்குமார். ஒரு நாள் மாலதி ஐந்து லிட்டர் மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குச்சியை உறசுகிறார். எண்ணெயில் நனைந்த பெட்டி எரியவில்லை. அந்த நேரம் பார்த்துத் தோழர் பொதினிவளவன் வந்துவிட்டார். அவருடன் பிரேம் கோபமாக வெளியேறிய பிறகு, மாலதியை தலைக்குக் குளிப்பாட்டித் தூங்கவைத்தேன். அன்று தீப்பெட்டி நனையாமல் இருந்திருந்தால்? புதுச்சேரியில் தோழர்கள் பேச்சில் மண்ணெண்ணெய் வாடை. தில்லியிலிருந்த சாருநிவேதிதாவின் மூக்கு முனைவரை அந்த வாடை எட்டிவிட்டது.

மாலதி என்னைப் படிக்க வைத்தார். பிரேமை படிக்க வைத்தார். இருமுறை கரு கலைப்பு செய்தார். தனக்கு இதில் சம்பந்தமில்லை என்பது போல பிரேம் விலகி நின்றார். பாவங்களை நான் சுமக்க, மாலதி வலியைச் சுமந்தார். வாழ்க்கையின் வலி பிரேமைத் தீண்ட நான் அனுமதித்ததேயில்லை. மாலதிக்கு என்மீது ஏக வருத்தம். பிரேமைப் பிரிந்துத் தனியே தன்னுடன் வாழ அழைத்தார். பிரேம் என்னை இந்திய மனைவியைப் போல நடத்தினான். அடிப்பான், உதைப்பான். ரவிக்குமார், சாரு நிவேதிதா சாட்சி. மாலதி என்னைப் பிரிந்துவிட்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்தோம். மாலதி கொடுத்த பெருந்தொகையில் பிரேம் ‘புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்’ நாவலை வெளியிட்டான். நூலை வெளியிட்ட மாலதி மீது அவனுக்குப் பிரியம் உண்டானது. கடற்கரை ஓரமாக மாடிவீட்டுக்குக் குடிப்போனோம். அண்ணன், தங்கை என்ற நாடகத்திற்கு வீடு கிடைக்கவில்லை. எனவே கதாபாத்திரங்களுக்குப் பெயரடையாளங்களை மாற்றினேன். இப்போது நான் கணவன், மாலதி மனைவி, பிரேம் என் தம்பி. பிரேம் என்றைக்குமே தம்பி வேடம்தான், தப்புவதற்கு எளிய வழி. அந்தக் குள்ள நரியைப் பற்றி பிறகொரு சந்தர்ப்பத்தில் விரிவாக, மனம் இடங்கொட்டுத்தால் எழுதுகிறேன்.
ஒரே வாரத்தில் இருபது கவிதைகளை எழுதினேன். மாலதி என்னைக் ‘கவிப்புயல்’ என்று அழைத்தார். அப்போது காற்று மண்டலத்தில் இசைப் புயல் மையம் கொண்டிருந்தது. மாலதி கரு தறித்தார். மாலதிக்குப் பரிசாக ஆறு மாதத்தில்  ஒன்பது சிறுகதைகளை எழுதிக் கொடுத்தேன். 15 -12- 1996 அன்று தாபிதா மைத்ரி பிறந்தாள். பிரேம் பல்கலைக் கழகத்தில் சினிமா படிக்கவந்த நிலா என்ற மாணவி மீது காதலில் விழுந்தான்.

பிரேம், நிலா காதலுக்கு நான் முட்டுக்கட்டைப் போடுவதாக பிரேம் சொன்னதாக சாரு நிவேதிதா என்னிடம் குறைபட்டுக்கொண்டார். தனக்கு ஒரு கிலோ அல்வா கிடைத்தது போல சாரு குத்தாட்டம் போட்டார். இலக்கியவாதிகளுக்கு மத்தியில் பாரதிராஜா படத்தில் காதலர்களைப் பிரிக்க அருவா தீட்டும் முறைமாமன் போல நான் சித்தரிக்கப்பட்டேன். யவனிகா ஶ்ரீராமிடம் மதுரையில் வைத்துப் பிரேம் விடியவிடிய புலம்பியதை யவனிகா வில்லுப்பட்டுப் போல நிகழ்த்திக்காட்டியபடி இருந்தார். உண்மையில் பிரேமின் காதலுக்கு நான் ஆதரவாக இருந்தேன். மாலதி என்னிடம் வெஞ்சினம் கொண்டார்; ‘ சுயநல நாயே, என்னை நீ பிரேமுக்குக் கூட்டிக்கொடுத்ததைப் போல அவன் நிலாவை உனக்குக் கூட்டிக்கொடுப்பான் என நினைக்கிறாயா? உன்னை அவன் ஏமாற்றுகிறான். நீ எழுதுவதைக் கொண்டு அவன் கொழுக்கிறான். உன்னைப் போல ஏமாளி அல்ல நான். குழந்தையைக் கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டு தூளிக் கயிறால் தூக்குமாட்டித் தொங்குவேன். போலிசுக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சாவேன். ஜெயிலில் அவன் பூலை ஊம்பிக்கொண்டிரு.’
மாலதி சொன்னதைச் செய்வார். என் மகள் எட்டுமாதக் குழந்தை. அதன் கழுத்தை மாலதி முறிப்பார். மறந்து போன மண்ணெண்ணெய் வாடை மீண்டும் நாசியைத் துளைத்தது. எனக்கும் வீரம் வந்தது. இதுவரை பிரேமிடம் அடிவாங்கிப் பழக்கப்பட்ட நான் ருத்ரனானேன். அவனைப் புரட்டிப்போட்டு மூக்கைக் கடித்துத் துப்ப முற்பட்டேன். மனம் வரவில்லை. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் அல்லவா? பிரேம் மூக்கில் பல் பொத்து வழிந்தக் குருதி உப்புக் கரித்தது. இந்த அபத்த வாழ்க்கையின் முதல் நாள் இரவு மாலதியின் கண்ணீர் என் தொண்டையில் கரித்ததைப் போல. பொய்யாய் பழங்கதையாய் போனதுவே வாழ்க்கை.
1998 ல் எம்.டி. முத்துக்குமாரசாமி சென்னையில் ‘இந்திய நாட்டுப்புறவியல் உதவி மையத்தில் Documentation Officer ஆக எனக்கு வேலை கொடுத்தார். சாரு, எம்.டி.எம்.மிடம் இப்படிச் சொன்னார்; ‘முத்து, ரமேஷுக்கு இந்த வேலையை நீங்கள் தந்தேயாகவேண்டும். இவர் சமையலறையிலிருந்து விடுதலையாக வேண்டும்,’ அதே அலுவலகத்தில் வைத்து சாரு ஒருமுறை சொன்னார்; ‘ரமேஷ் வாழ்க்கையில் கொஞ்சமேனும் சுயநலத்தோடு இருங்கள், பிரேமை நம்பி ஏமாற்றாதீர்கள்.’ இதையேதான் மாலதி மீண்டும் மீண்டும் சொன்னார். மாலதியைவிட பிரேம் மீதுதான் எனக்குக் கொள்ளை காதல். என்னிடமிருந்த எல்லாவற்றையும் அவனுக்கே தந்தேன். என்னுடைய பெண்களை எல்லாம் அவனுடன் பகிர்ந்துகொண்டேன். இதே ஆண்டில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை வாசித்துவிட்டு ‘தமிழில் நோபல் பரிசுப் பெற தகுதியுடைய படைப்பு எழுட்தப்பட்டுவிட்டது என்று பேய்க்கூச்சல் போட்டேன். சாருவின் முகம் இருண்டது. ராஜன்குறையுடன் என்னை வாதுக்குக் கூட்டிச்சென்றார். அது இந்துத்துவ நாவல் இல்லை; அது பவுத்த நாவல் என வாதிட்டேன். நான் ஜெயமோகனைத் தூக்கிப் பிடிப்பதில் பிரேமுக்கு உவப்பில்லை. வாழ்க்கையிலும் உண்மை இல்லை, இலக்கியத்திலும் உண்மை இல்லை என்று பிரேமைவிட்டு மனத்தளவில் விலகினேன்.

2000 இல் மாலதி, மாலதி மைத்ரி ஆனார். 2002 இல் மாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி’ வெளிவந்தது. 50 கவிதைகள் அடங்கிய அந்நூலில் 25 கவிதைகள் எனது நோட்புக்கிலிருந்து எடுத்துச் சேர்த்தவை. தாய்மை, குழந்தைமை, இயற்கையும் பெண்ணுடம்பும் போன்ற தளங்களில் அமைந்த கவிதைகள் அவை. தொகுதி இரண்டு பதிப்பு கண்டது. இரண்டுக்கும் மாலதி மைத்ரி பெயரில் நான் முன்னுரை எழுதினேன். சென்னையில் ஒரு விமர்சன அரங்கில் வெளி ரங்கராஜன் தொகுப்பிலிருந்து குழந்தையின் கண்ணீர் என்ற கவிதையை வாசித்துக்காட்டி இதை ஒரு பெண்ணால்தான் எழுதமுடியும், ஒரு ஆணால் சாத்தியமாகாது எனப் பேசியிருக்கிறார். அதை மெய்ச்சிலிர்க்க என்னிடம் குறிப்பிட்ட மாலதியிடம் நான் அமைதியாகச் சொன்னேன்; ‘மாலதி, நான் தாயும் ஆனவன்.’ என்னை நான் தாயுமானவன் என்று சொன்னதும் அவர் முகம் கருத்துவிட்டது. அது என்னுடைய கவிதை.

மாலதி மைத்ரியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு ‘நீரின்றி அமையாது உலகு’ க்கு வழக்கம்போல அவர் பெயரில் முன்னுரை எழுதித்தந்ததோடு 20 கவிதைகளை தானமாகக் கொடுத்தேன். மூன்றாம் தொகுப்பான ‘நீலி’ க்கு என்னிடமிருந்த கவிதைகளை எல்லாம் கொடுத்த பிறகும் 48 க்கு மேல் தேறவில்லை.

இந்த மூன்று தொகுப்புகளில் இடம் பெற்ற எனது கவிதைகளின் பட்டியலை சாவகாசமாக வெளியிடுவேன்.

மாலதியின் ‘விடுதலையை எழுதுதல்’ நூலிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் நான் எழுதியவை. குறிப்பாக தீராநதியில் அவர் பெயரில் வெளிவந்த கட்டுரைகள், தீராநதி, காலச்சுவடு, பனிக்குடம் (உமாமகேஸ்வரியின் கவிதைத் தொகுப்புக்கு எழுதியது) இதழ்களில் வந்தவை நான் எழுதியவை. நான் செய்வது இலக்கிய ஊழல் எனச் சொல்லி பிரேம் என்னைக் கண்டித்திருக்கிறான். பிரேம் மைசூரில் பணியின் நிமித்தம் என்னைப் பிரிந்திருந்த காலத்தில் என்னை தனது பால் அடிமையாக ஆக்கிவைத்து என் மொத்த இலக்கியச் சொத்தையும் அபகரித்தார் மாலதி. பெண் படைப்பாளர்களில் தன்னை ‘நம்பர் ஒன்’ நிலையில் நிலைப்படுத்திக்கொண்டு என்னை ஒதுக்கினார். பிரேமுக்கு தில்லிப் பல்கலையில் நிரந்தரப் பணி கிடைத்ததும், கல்யாணமே ஆகாத என்னை சட்டரீதியாக மணமுறிவு செய்துவிட்டு அவனைப் பதிவுத் திருமணம் செய்யத் திட்டமிட்டார். அதற்கு என்னையும் பிரேமையும் பிரிக்க முற்பட்டார்.
நான் ஆரோவில் மைய நூலகத்தில் ‘கேட்டலாக்கர்’ பணியில் இருந்தேன். வருமானவரி கட்டினேன். பிரேமை எம். ஏ. தமிழ் படிக்கவைத்தேன். முனைவர் பட்டம் செய்யவைத்தேன். எனது பதினெட்டு வயதிலிருந்து உழைக்கிறேன். சென்னை, ஆரோவில் தவிர எல்லாமே உடல் உழைப்பு சார்ந்த பணி. பிரேம், ரவிக்குமார், ராஜ்கவுதமன், சாரு நிவேதிதா, அமரந்தா, பொதினிவளவன் போன்றவர் அந்தப் பெண்ணால் நான் சீர் குலையப்போகிறேன் என்று ஆரம்பக் காலந்தொட்டு என்னை எச்சரித்தனர். ஐயோ பாவம், நம்மைத் தவிர மாலதிக்கு யார் இருக்கிறார் என்று இரக்கப்பட்டேன். வினை விதைத்தவன் வினையறுப்பான். நான் அறுக்கிறேன்.

மாலதி வெற்றிகரமாக என்னையும் பிரேமையும் பிரித்தார். அதற்கு முன்பாக என்னைச் சுற்றியிருப்பவர்களை என்னைவிட்டுப் பிரித்தார். ராஜன் குறை, பொதியவெற்பன் மீது அபாண்ட பழிச் சுமத்தினார். ரவிக்குமார், அ.ராமசாமி இருவரும் தன்னை பஜாரி என எழுதிவிட்டதாகச் சொல்லி என்னையும் பிரேமையும் அடிதடியில் இறக்கினார். அருணன், கீழை இலக்கியன் போன்றவர்களைப் பிரித்தார். கடைசி காலத்தில் எனக்கும் யவனிகாவுக்கும் ‘கடவுளின் நிறுவனம்’ என்ற அவருடைய நூலின் தலைப்பை முன்வைத்து கொம்பு சீவிப் பார்த்தார். சென்னையில் எனது ‘உப்பு’ நூல் வெளியீட்டு விழாவில் எஸ்.ராமகிருஷ்னனிடம் சண்டையிழுத்து சம்பந்தமில்லாத என்னை வீதிக்கு இழுத்துவிட்டார். குடும்ப நண்பரான கரிகாலன், சு. தமிழ்ச்செல்வி இணையரின் குடும்பப் பிரச்சினையில் தலையிட்டு குழப்பம் விளைவித்தார். சேலம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற சல்மாவின் ‘இரண்டாம் சாமங்களின் கதை’ விமர்சனக் கூட்டத்தில் உரையாற்ற சென்ற என்னை மிரட்டி செல்வதைத் தடுத்தார். பிரேமைவிட்டு விலகி தனியாக எழுது என நிர்பந்தித்தார். அதீதனின் இதிகாசம் வெளிவருவதைத் தடுத்து நிறுத்த முயன்று தோற்றார். அந்நூலை பிரமிளின் ‘காப்பி’ அதை வெளியிட்டால் பெயர் கெட்டுவிடும் என்றார். மாதம் மூன்றாயிரம் ரூபாய் தருகிறேன் பிரேமை விட்டுப் பிரிந்துவிடு, நீ இல்லாவிட்டால் பிரேம் ஒரு டம்மி பீஸ் என என்னை உருவேற்றுனார். நான் மசியவில்லை. பிரேமுக்கு ஒரு பிள்ளை பெற்றுத் தருகிறேன் என அவனுடன் தில்லியில் பல மாதம் தங்கி அவனை ஏமாற்றி போக்குக்காட்டி ஆண்மையற்றவன் எனச் சொல்லி அவனையும் நம்பவைத்தார். பிரேமுடைய தம்பிக்கு தனது தங்கையை மணம்முடித்து, உறவு என்ற வலைக்குள் பிரேமை முடக்கினார். பிறகு என்னை நடுயிரவில் வீட்டைவிட்டுத் துரத்தினார். இடையில் ஒருமுறை என்னை கொல்ல முயன்றார். அப்பொழுது நான் மூர்த்தி என்ற முன்னாள் தலித் சட்டமன்ற உறுப்பினரிடம் என்.ஜி.ஓ. வாகப் பணியில் இருந்தேன். பணியின் ஒரு பகுதியாக மாலையில் சிறிது மது அருந்துவோம். அப்படி நான் மது அருந்திவிட்டு உறங்கியபோது தலையணையை என் முகத்தில் வைத்து அழுத்தியிருக்கிறார். நான் மூச்சுத்திணறவே என்னைவிட்டு விலகியிருக்கிறார். விடியலில் நான் விழித்ததும் சொல்லியழுதார். நான் ஆறு மாதத்தில் பிரிந்துவிடுகிறேன் எனச் சொல்லி ஆறுதல் சொன்னேன். தில்லியிலிருந்து வந்த பிரேமிடம் சொல்லி அழுதேன். இந்தப் பைத்தியத்திடம் குழந்தை எப்படி வளர்வாள், குழந்தை பிரான்சிற்குச் சென்றதும் கண்காணாமல் மறைந்துவிடுகிறேன் என அழுதேன். மனநோயாளர்களைப் பற்றி நாம் நிறைய எழுதியிருக்கிறோம், பேசியிருக்கிறோம். ரமேஷ் நீ விலகிவிடு. உனக்கும் நல்லது, குழந்தைக்கும் நல்லது எனச் சொல்லி புனிதன், அருளாளன் தில்லிக்குப் போய்விட்டான். நடுயிரவில் மாலதியால் விரட்டப்பட்டேன். எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா கடவுளைப் போல உதவினார். இருபத்தைந்தாயிரத்திற்குப் பெயரிடாமல் காசோலை தந்தார். எனக்கு வங்கிக் கணக்கு எதுவுமில்லை. ஜெயபால் என்ற குடும்ப நண்பரின் வங்கிக் கணக்கில் செலுத்தி மூர்த்தி எம்.எல்.ஏவின் தென்னந்தோப்பில் கூரைவீடு கட்டிக்கொண்டு குடியேறினேன். ஒருநாள் இளம் விடியலில் இளங்கவி அருள்  கதவைத் தட்டி எழுப்பினார். கதவைத் திறந்தேன், கோணங்கி நின்றிருந்தார். ஓவென்று கதறி அழுதுவிட்டேன். மாலதியுடன் அழுகையில் தொடங்கிய வாழ்க்கை எனது தனித்த கதறலுடன் இந்த இடத்தில் முடிவுக்கு வருகிறது.

மாலதிக்கு நான் செய்த பாவத்தினால் பக்கவாதத்தால் ஊனமுற்று வீழ்ந்துவிட்டேன் என தனது முகநூலில் எழுதுகிறார். அது அப்படியில்லை. நான் செய்த பாவம் ஒரு வரலாற்றுப் பிழை. சாதாரண ஒரு பெண்ணை அவள் தந்த காமத்தில் மயங்கி என் எழுத்தால் ஒரு பெரும் படைப்பாளி ஆக்கியது. நான் செய்த இலக்கிய ஊழலுக்குத் தக்க தண்டனையை தமிழ்த்தாய் எனக்குத் தந்துவிட்டாள். ஜெயமோகன், மாமல்லன், எஸ். ராமகிருஷ்ணன் மூவரும் செய்த உதவியால் உயிர் வாழ்கிறேன். ஆண்பால் பிரேம் என்னைப் பிரிந்துவிட்டான். கடவுள் பெண்பால் பிரேமா என்பவரை எனக்கு அருளியிருக்கிறது, அத்தாயின் ஆதரவில் வாழ்கிறேன். சுவரில் தொங்கும் வள்ளலாரும் பாரதியும் என்னைக் காக்கிறார்கள். மாலதியின் முகநூல் எச்சரிக்கை, மறைமுகக் கொலைமிரட்டல் இந்த அபத்தத்தை எழுதவைத்தது. படைப்பாளி பிரேம் இன்று மொழிபெயர்ப்பாளனாகச் சுருங்கிவிட்டான். தன் மனைவியிடமிருந்து அவனைக் கடவுள் காக்கவேண்டும்.

             அருட்பெருஞ் சோதி
             தனிப்பெரும் கருணை.

000   000

பி. கு:
நான் நான்கு ஆண்டுகளாக எழுந்து நடக்கமுடியாத நிலையில் இருக்கிறேன். பத்து ஆண்டுகளாக தனித்து வாழ்கிறேன். மாலதியால் என் உயிருக்கு உத்திரவாதமற்ற நிலையில் பயந்து பயந்து வாழ்கிறேன். பக்கவாத பாதிப்போடு மூன்று நூல்களை எழுதி முடித்தேன். இன்னும் ஏழு நூல்கள் எழுதவேண்டும். அதுவரை உயிர்வாழவேண்டும்.

என்மீதான கொலைவெறியோடு மாலதி தவிப்பதின் காரணம் அனைவருக்கும் விளங்கியிருக்கும். என்மீது பொய்ப்பழி சுமத்தி வக்கரிக்கும் மாலதி என்னை நோக்கி உதிர்த்த ‘பொன்மொழி’களைப் பட்டியலிடுகிறேன், மேலதிகப் புரிதலுக்கு:

1.     குந்தக் குடிசை இல்லை உனக்கு இவ்வளவு திமிராடா?
2.     உன்னையும் பிரேமையும் பிரிக்கிறேன், உன்னை நடுத்தெருவில் நிறுத்துகிறேன்.
3.     லிட்டரேச்சர் எல்லாம் புல்ஷிட், லைஃப்தான் முக்கியம்.
4.     தன் நூலுக்கு மதிப்புரை எழுதுனா எவளும் உன்கிட்ட படுப்பா.
5.     ரமேஷ், நான் இதுவரைக்கும் பார்த்தக் குஞ்சிலயே சின்னக் குஞ்சி உன்னோடதுதான்.
6.     (பிரேம், மாலதியைச் சுட்டி ஷோபாசக்தியிடம்) பிரான்சுக்கு என்னைக் கூப்பிடாம, இவள ஓக்கத்தானே பிரான்சுக்குக் கூப்புடுற?

பிரேம் கூற்றுக்கு மாலதியின் பொன்மொழி: மெளனம்.
வாழ்க்கையில் இதுவரை நான் பொய் பேசியதில்லை. யாரையும் வஞ்சித்ததில்லை. பிரேமைத் தவிர வேறு யாரையும் வெறுத்ததில்லை. அவன் என் வாழ்க்கையைத் தின்று ஏப்பம் விட்டுவிட்டான். எனது மரணத்திற்கு முழுமுதற் காரணம், மாலதி- பிரேம் இணையர். இதை எனது சட்டபூர்வமான வாக்குமூலமாகக் கொள்ளலாம். சைக்கோ துரத்துகிறாள். ஊனமுற்ற நான். பதுங்க வழியில்லை. பயமாக இருக்கிறது. கடவுளே, பாவிகளை நல்வழிபடுத்துக.